மேக்கப் கிட்டை பயன்படுத்திய மாமியார்... ஆத்திரத்தில் மருமகள் செய்த செயல்!
ஆக்ராவில், மாமியார் தனது மேக்கப் கிட்டை பயன்படுத்தியதைக் காரணமாகச் சொல்லி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்ற இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சத்தமாக குறட்டை விடுகிறார், வீட்டைச் சுத்தம் செய்யாமல் இருக்கிறார் என்றெல்லாம் விநோதமான காரணங்களைக் காட்டி விவகாரத்து பெற்றவர்கள் உண்டு. அந்த வரிசையில் மேக்கப் கிட்டை வைத்து ஆக்ராவில் பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவின் புறநகர் பகுதியான மல்புராவில் வசித்து வரும் சகோதரர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இருவரும் சகோதரிகளாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த குடும்பத்தின் மூத்த மருமகள் பயன்படுத்தும் மேக்கப் கிட்டை, மாமியார் அவரது அனுமதி இல்லாமல் எடுத்துப் பயன்படுத்தியுள்ளார். மேலும், நவீன உடைகள் அணிந்து வீட்டிற்குள் வலம் வந்துள்ளார்.

இதனை மூத்த மருமகள் பார்த்துவிட்டு, மாமியாருடன் சண்டையிட்டுள்ளார். இது குறித்து மாமியார் தனது மகனிடம் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக கணவன் - மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கணவன், மனைவியைத் தாக்கியுள்ளார். அத்துடன், அவரையும் தனது தம்பி மனைவியையும் தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூத்த மருமகள் தற்போது விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.இதனையடுத்து, குடும்ப நல ஆலோசனைக்குழுவினரிடம் இந்த வழக்கு சென்ற போது, வழக்கு குறித்து விசாரித்த ஆலோசகர், அந்த பெண்ணிற்கு அறிவுரைகள் வழங்கினார். ஆனால்அந்த பெண், அம்மாவின் பேச்சைக் கேட்டு கணவன் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் அதனால், கட்டாயம் விவாகரத்து செய்தே தீருவேன் என கூறியுள்ளார்.

இருப்பினும் அந்தப் பெண் தனது முடிவை மாற்றிக்கொள்ள அவகாசம் அளித்து கணவன் - மனைவி இருவரையும் அடுத்த மாதம் நேரில் அழைத்து ஆலோசனைகள் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார் குடும்ப நல ஆலோசகர்.

மாமியார் தனது மேக்கப் கிட்டை பயன்படுத்தியதற்காக கோபப்பட்டு மருமகள் விவாகரத்து வரைக்கும் போயிருக்கும் விவகாரம் ஆக்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

image