ரேஷன் கடைகளில் இனி புதிய வசதிகள்: தண்ணீர் பாட்டில் முதல் இணைய சேவை வரை!
ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் தண்ணீர் பாட்டில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளிலேயே ஆன்லைன் சேவைகள் வழங்கும் திட்டமும் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.
மக்களின் அத்தியாவசியத் உணவுப் பொருள்களை குறைந்த விலையில் வழங்குவதற்காக ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையும், அவை விற்பனை செய்யும் பொருள்களின் விவரங்களும் வேறுபடும்.

கேரளாவில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் திட்டம் 2020ஆம் ஆண்டே செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. வெளிச் சந்தையில் 20 ருபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் விற்பனை செய்யப்படும் நிலையில் 11 ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதை அப்போது நடைமுறைப்படுத்த முடியவில்லை. தற்போது 10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது கேரள நீர்ப் பாசனத் துறையின் கீழ் இயங்கும் கேரள நீர்ப் பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் ஹில்லி அக்வா என்ற குடிநீர் பாட்டில் 8 ரூபாய்க்கு ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கடையில் மக்கள் அதை 10 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் தண்ணீர் பாட்டில் கிடைக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாட்டில் ஒன்றுக்கு 2 ரூபாய் கமிஷன் கிடைக்கும்.

இது மட்டுமல்லாமல் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு கூடுதல் பொருள்கள் வழங்கவும், வங்கி மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ரேஷன் கடைகளை கே-ஸ்டோர் என பெயர் மாற்றவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேஷன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.